August 25, 2026, 2:31 pm
நாகர்கோவில்: பள்ளவிளை நியாயவிலை கடையில் முறைகேடு - 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிவிட்டு 3 லிட்டர் என ஏமாற்றும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
நாகர்கோவில், பள்ளவிளை பகுதியில் இயங்கிவரும் நியாயவிலை கடையில் (Ration Shop) பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களில் கடுமையான முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இங்குள்ள நியாயவிலை கடையில் பொதுமக்களுக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தகுதியான அளவைக் குறைத்து வழங்குவதாகவும், குறிப்பாக 2 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கிவிட்டு, பதிவேட்டில் 3 லிட்டர் வாங்கியதாக வாடிக்கையாளர் பெயரில் விற்பனையாளர் மோசடி செய்து கையெழுத்து பெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு பொதுமக்களுக்கு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களைத் தங்களின் சுயலாபத்திற்காக இதுபோன்று குறைத்து வழங்குவதும், கணக்கில் முறைகேடு செய்வதும் ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட பள்ளவிளை நியாயவிலை கடை விற்பனையாளர் மீது உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் விசாரணை நடத்தி, கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு 18, தவெக (TVK) உறுப்பினர் அனிற்றஸ் விஜின் தரப்பில் தீவிர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.