August 22, 2026, 10:07 am

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் அதிரடி சோதனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ. 50,000 அபராதம்!

Charles Miller Street Nagercoil, Pleastic Usage Fine Rs.50000/-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிமேடை சார்லஸ் மில்லர் தெருவில் உள்ள ஹோல்சேல் கடையில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை அருகே உள்ள சார்லஸ் மில்லர் தெருவில் அமைந்துள்ள பிரபல ஹோல்சேல் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த சோதனையின் போது, விற்பனைக்காகவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல மூட்டை தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் சிக்கின. அபராதம் விதிப்பு: இதனைத் தொடர்ந்து, கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் முழுமையாகப் பறிமுதல் செய்தனர். மேலும், விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்ததற்காகக் கடை உரிமையாளருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி எச்சரிக்கை: நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீதான இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.